547. ராஜாவின் இசை மேதைமை
இளையராஜாவின் இசை குறித்த கருத்துச்செறிவு மிக்க நுணுக்கமான அலசலை, பின்னூட்டங்களாக தமிழ் இணையத்தில் வாசிக்க நேர்ந்தது. அவை பலரும் வாசிக்க வேண்டியவை, சேமிக்கத்தக்கவை என்று கருதுவதால், அவ்விரு பின்னூட்டங்களை இடுகையாக என் வலைப்பதிவில் இடுகிறேன்! பதிவுலக நண்பர்களிடையே தனிமனித விருப்பு/வெறுப்பு சார்ந்த சச்சரவாக, விவாதம் மாறி விடாமல் இருக்க, அவ்விரு பின்னூட்டக் கருத்துகளை சற்றே மட்டுறுத்தி பதிய வேண்டியது அவசியமாகிறது! இனி வாசியுங்கள்....
இவை ரோசா வசந்த்தின் கருத்துகள்:
ரோஸாவசந்த் 10:19 am on August 28, 2009
http://rozavasanth.blogspot.com/2006/05/1.html
http://rozavasanth.blogspot.com/2006/06/2.html
இந்தி பாடல்களை கேட்டுகொண்டிருந்த தமிழர்களை தமிழ் பாடல்களை ராஜா கேட்க வைத்தார் என்று சொல்லும் வாதத்தை சில ஆதாரத்துடன் வன்மையாக மறுத்திருந்தேன். இந்தியில் இருந்து ராஜா தமிழை காப்பாற்றினார் என்பது போல எம்.எஸ்.வி போன்ற மேதைகளை கேவலப்படுத்தும் வாதம் வேறு கிடையாது. ராஜா என்று ஒருவர் பிறக்காமல் இருந்தால் கூட இந்திப்பாடல் ஆதிக்கத்திலிருந்து தமிழ் நிச்சயாமாய் தப்பியிருக்கும்,
அடுத்து ஹிந்திக்காரர்கள் எல்லாம் இப்போது தமிழ் பாட்டு கேட்டு கொண்டிருக்கிறார்களா? அப்படியே இருந்தாலும் இதெல்லாம் எனக்கு ஒரு மேட்டரே இல்லை. அடிப்படையில் அடிமை மனநிலையை கொண்டிருப்பவர்களுக்குதான் இந்திக்காரர்கள் இசையை அங்கீகரிப்பது என்பது ஒரு பொருட்டாக இருக்க முடியும். ராஜா தமிழ் திரை உலகில் ஒரு பொற்காலத்தை உருவாக்கியிருந்த போது, இந்தியில் பப்பிலஹரி கொடிகட்டி பறந்தார். ..... அளவுகோல் படி பப்பிலஹரி ஒரு மேதையாக தெரியலாம்.
நான் கட்டாயப்படுத்தி .. கருத்தை மாற்ற முடியாது. சுமார் 40 ஆண்டுகளாக மிக வளமாக இருந்த ஹிந்தி திரை இசை, 70களிலேயே அலுப்பூட்டும் மோனொடோனஸ் இசையாக மாறி, 80 களில் குப்பையாகி, 80களின் இறுதியில் கழிவாக மாறியிருந்தது. இவைகளை உதாரணத்துடன் விளக்க முடியும். அந்த சூழலில் கூட ராஜாவால் இந்தியில் தடம் பதிக்க முடியவில்லை என்றால் அந்த வெகுரசனை கேவலமானதா அல்லது அது ராஜவின் குறையா?
நான் ரஹ்மான், ராஜா உட்பட யாரையும் ஒப்பிடுவதில்லை. ராஜாவின் இசை மட்டும் போதுமான ஒன்றாக எனக்கும் சமூகத்திற்கும் இல்லை என்றுதான் நினைக்கிறேன். ஆனால் ஜீனியஸ் என்ற வார்த்தைக்குள் ராஜாவை மட்டுமே என்னால் அடக்க முடியும். ஓரளவு இசை அறிவு கொண்டு மற்றவர்கள் அளித்த இசை பரிணமித்ததை பாதையை ஒரு சட்டகத்தில் புரிந்து கொள்ள முடியும். ரோஜா, ஜெண்டில்மேன் துவங்கி ̀மஸக்கலி ‘பாடல்வரை அது எவ்வாறு ஏற்கனவே இருந்த இசைகளை மிக திறமையான முறையில், நீண்ட உழைப்பிற்கு பின் manipulate செய்து உருவானது என்று புரிந்து கொள்ளமுடிகிறது. ராஜா அளித்தவைகள் இத்தகைய எந்த புரிதலுக்கும் அப்பாற்பட்டு இருப்பதாலேயே அவரை மட்டுமே நானும் பலரும் ஜீனியஸ் என்கிறோம். இதில் மாறுபடுவர்களுடன் சண்டை போடுவதில் எந்த அர்த்தமும் இல்லை - ஓரமாக இதை சொல்லிவிட்டு போவதை தவிர.
ராஜா செய்த அனைத்தும் அதிசயம்! ̀செந்தூரப்பூவே’யில் துவங்கி (நான் அன்னக்கிளியில் ராஜாவை துவக்க மாட்டேன்) ̀தென்றல் வந்து தீண்டும் போது’ வரை அனைத்தும் நமது புரிதல்களுக்கு அப்பாற்பட்டது. இதுவரை நாம் அறிந்த genreக்களில் அடங்காமல், அவைகளின் fusion என்றும் வகைப்படுத்த முடியாத ஒன்று. ராஜாவின் காலத்தில் இந்த அதிசயத்தை உணர்ந்தததாக சொல்ல முடியாது. அப்போது அது ஒரு ஹிட் இசை என்ற அளவில் மட்டுமே இருந்தது. 20 ஆண்டுகள் கழித்தே இதன் பல அறியாத நுட்பங்களை பேசிக்கொண்டிருக்கிறோம். இன்னமும் பிடிபட்டதாக சொல்ல முடியவில்லை. அதிசயிக்க மட்டுமே முடிகிறது.
ராஜாவையும் ரஹ்மானையும் ஒப்பிடுவது என்பது மிகவும் அபத்தம். நான் ஒரு அறிவுத்துறையில் ஆராய்ச்சி செய்யவேண்டும் என்றால் இதற்கு முன்னால் பங்களித்தவர்களை தாண்டித்தான் ஏதாவது செய்யவேண்டும். அவ்வாறு தாண்டி செய்துவிட்டதால் ஐன்ஸ்டீனை விட நான் பெரிய ஆளாகிவிட முடியாது. அந்த வகையில் ரஹ்மான் ராஜாவை தாண்டி சென்றவர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் இதை வேறு விதமாக பார்க்கலாம். (இதுவும் நேரடி ஒப்பிடல் இல்லை.)
76 இல் இருந்து 92 வரை ராஜா, 92 இல் இருந்து 2008 வரை ரஹ்மான். இந்த 16 வருடங்களை ஒப்பிடுங்கள். புகழின் உச்சத்தில் இருந்தும் ரஹ்மான் இன்னும் 100 படங்களுக்கு கூட இசையமைக்கவில்லை. ராஜாவோ சுமார் 800 படங்கள், எல்லா படங்களிலும் இன்னும் 100 ஆண்டுகளுக்கு நாம் அலசவேண்டிய நுட்பம் கொண்ட பிண்ணணி இசை. அந்த கணத்தில் நிகழ்ந்த அதிசயம் போல பாடல்கள். இவை அத்தனையும் ராஜா என்ற தனி மனிதன் முழுமையாக எழுதிக்கொடுத்தது. ரஹ்மானைப்போல விக்கி விநாயக்ராமின் பையனை(பெயர் மறந்து விட்டது) பல வகை தாளங்களை தனித்தனியே போடச்சொல்லி, பதிவு செய்து, அவைகளின் பல கலவைகளை இரவு முழுக்க ஆராய்ந்து ̀அழகான ராட்சசி’யின் தாளமாக தருவது அல்ல. ரஹ்மான் செய்வது மீது எனக்கு எந்த விமர்சனமில்லை. ஆனால் அது நாம் புரிந்து கொள்ளும் சட்டகத்தில் அடக்கும் மிக திறமை + உழைப்புக்கு பின் விளையும் இசை. ராஜா, பலர் கவனித்திருக்க வாய்ப்பு குறைவாக உள்ள, ̀பகவதிபுரம் ரயில்வே கேட்’ என்ற படத்தில் ̀செவ்வரளி தோட்டத்திலே’ அளித்தது இந்த புரிதல்களுக்கு அப்பாற்பட்ட அதிசயம்.
இருந்தாலும் ராஜாவை சினிமாவிற்கு பொருத்தமானவராக இல்லை என்றுதான் என் பதிவில் கருத்து கூறியிருக்கிறேன். இதை இன்னொரு சந்தர்ப்பத்தில் எழுதியிருக்கிறேன். “சினிமாப் பாடலிசையின் தேவைகளை மிக பொருத்தமாய் (ஒரு விஸ்வநாதனைப் போல, ரஹ்மானைப் போல) அவராய் திருப்தி செய்ய இயலவில்லை என்றும் தோன்றுகிறது” என்பதுதான் என் கருத்து.
இந்த வகையில் ராஜா குறித்தும் மற்றவர்கள் குறித்தும் பேசவும், உரையாடவும் நிறைய உள்ளது. (20 ஆண்டுகளாய் குப்பைகளை உற்பத்தி செய்த) ஹிந்தியில் வெற்றி பெற முடியவில்லை, வெள்ளைக்கார சினிமாக்காரன் ரஹ்மானை கூப்பிட்டான் ராஜாவை கூப்பிடவில்லை என்கிற வாதங்களை முன்வைத்து அல்ல. (உண்மையில் பல மேற்கின் இசை அறிஞர்கள் ராஜாவைத்தான் கொண்டாடுகிறார்கள், ரஹ்மானை அல்ல என்பதுதான் உண்மை. ஆதாரத்துடன் மேற்கோளுடன் சொல்ல முடியும்).
மற்றபடி ....கேள்வி கேட்டு பதில் சொல்லி விவாதிக்கும் விஷயம் இதுவல்ல. ....கருத்துக்களை மாற்றும் நோக்கமும் எனக்கில்லை. ராஜா மீதான் வெறுப்பு என்று காரணம் இல்லாம் பரவிகொண்டிருக்கும் அலையில் .... விழக்கூடாது
நன்றி!
***********************************************
இவை Kaargi Pages அவர்களின் கருத்துகள்:
முதலில் இந்தியில் இசை அமைப்பது இந்தியப் புகழ் பெற்றுவிட்டதற்கான ஒரு பென்ச்மார்க் என்பது போலவும். ஹாலிவுட்டில் இசையமைப்பது உலகப் புகழுக்கான பென்ச்மார்க் போலவும் <கூறுவது தவறு>
ரஹ்மான் ஒரு திறமைசாலி என்பதை மறுக்கவில்லை. ஆனால் அவர் இளையராஜாவை தாண்டிச் சென்றாரா? அப்படி அவர் இளையராஜாவைத் தாண்டிவிட்டார் என்று .... சொல்வதானால் அவர் இளையராஜாவால் கையாள முடியாத எந்த வகை இசை வடிவத்தை உருவாக்கினார் என்பதை .... விளக்க வேண்டும்.
அதே நேரம் இளையராஜாவோ தனக்கு முன் இருந்த எல்லா திரைஇசை அமைப்பு முறைகளையும் மரபுகளையும் வடிவங்களையும் (மோனோடோன்) உடைத்து இசையை ஒரு பலவண்ணக் கலவையாக பாமரனுக்குக் காட்டினார். நாட்டுப்புற மெட்டு கருநாடக மெட்டாக உருமாறுவதாகட்டும்.. தமிழக நாட்டுப்புற இசையும் கருநாடக இசையும் மேற்கத்திய செவ்வியல் இசையும், ஜாஸ் ராக் போன்ற மேற்கத்திய இசை வடிவங்களும் ஒன்றன் மேல் ஒன்றாக - ஒன்றில் ஒன்று கலந்து - ஒன்றை ஒன்று தொடர்வது போல் - ஒன்று இன்னொன்றாக உருமாறுவது போல - ஒன்றின் வடிவத்தில் இன்னொன்றின் உள்ளடக்கம் கொண்டு - இப்படி அவர் செய்யாத பரிசோதனை முயற்சிகள் இல்லை. அவரின் ஒவ்வொரு பரிசோதனை முயற்சியும் இன்று வரையில் ஒரு ரீங்காரமாய் நம்மை விட்டு அகலாமல் சுற்றிச் சுற்றி வந்து கொண்டே இருக்கிறது..
இந்த மறுமொழியை டைப் அடிக்கும் போதே கணினியில் இளையராஜாவின் இசையில் போன மாதம் வெளியான ஒரு கன்னட பாடலான "ஹொடதவனே" ஓடிக் கொண்டிருக்கிறது ( http://www.youtube.com/watch?v=RHSpqVaud80 ) இந்த மனிதருக்கு 67 வயதாகி விட்டது என்பதை அவரைக் கண்டிராத ஒருவர் இந்தப் பாடலைக் கேட்டால் ஒப்புக் கொள்ளவே மாட்டார். ஒரு 'குத்து' பாட்டிற்குள் ஆங்காங்கே மெல்லியதான ஒரு மெலடி - இப்போதைய "குத்தர்களின்" ( ஏ.ஆர், ஹாரிஸ், யுவன், தொடங்கி இமான் வரையிலான) பாணியை கேலி செய்யும் ஒரு ஆர்கெஸ்ட்ரேஷன்.. அந்த ரிதம்... ஓ...
ஏ.ஆர் ரஹ்மான் சில குறிப்பிடத்தகுந்த பாடல்களைக் கொடுத்திருக்கிறார் என்பதை மறுப்பதற்கில்லை. அவரின் தளம் வேறு. அவர் இன்றைய உலகமயமாக்கல் யுகத்தின் பிரதிநிதி. இளையராஜாவோ எழுபதுகளில் கொந்தளித்துக் கொண்டிருந்த ஒரு உலகத்தை பிரதிபலித்தவர் - கட்டுமீறத் துடித்த இளைஞர்களின் - ஒரு வெடித்துக் கிளம்பிய ஒரு குரல். அன்னக்கிளியின் டைட்டில் பி.ஜி.எம்மில் பீறிட்ட அந்த வயலின்.. எண்பதுகளில் அவரின் இசையில் பிரதான இடத்தைப் பிடித்திருந்த அந்த மெட்டாலிக் ஸ்ட்ரிங் கிடார்கள்.. அவரது பாடல்களில் இடம்பெற்ற ஒவ்வொரு இண்டர்லூட்களிலும்(இடைஇசை) ப்ரீலூட்களிலும் (துவக்க இசை) நமது நரம்புகளைப் பிடித்து இழுத்த அந்த தந்திக் கம்பிகள்.. அவர் அன்றைய தனது சூழலைப் பிரதிபலித்தார்.. அந்த காலகட்டத்தின் இளையராஜாவின் இசை விரிவாக ஆய்வு செய்யப்பட வேண்டியது
இன்றைய மாறிப்போன சமூக சூழல் பாஸ்ட் புட் கேட்கிறது. ரஹ்மான் சிறப்பான பீஸ்ஸா தயாரிப்பாளர்.. அவர் தனது சூழல் எதைக் கேட்கிறதோ அதை விற்கிறார்.. இளையராஜாவோ தனது படைப்பின் வடிவத்தை சூழலின் டிமாண்டிற்கும் உள்ளடக்கத்தை தனது ஒரிஜினாலிட்டியுடனும் கொடுக்க முடியுமா என்று பரிசோதித்துப் பார்த்துக் கொண்டிருக்கிறார்... கடந்த ஒரு பத்தாண்டுகளாக அந்தப் பரிசோதனையின் சில வெளிப்பாடுகள் ஏற்றுக் கொள்ளப்பட்டது ( சில உதாரணங்கள் - ஹேராம், விருமாண்டி, சிறைச்சாலை, ஆதினகலூ(கன்னடம்), நான் கடவுள், ப்ரேம் கஹானியின்(கன்னட) பாடல்கள், வால்மீகி,) சில ரசிகர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
அவர் தனது காலம் முழுவதும் பரிசோதனைகள் செய்து கொண்டிருப்பார்.. அந்தப் பரிசோதனைகள் எதிர்காலத்தில் இசை ஆய்வு செய்யும் மாணவர்களுக்கு ஒரு புதையலாக காத்திருக்கும்.
நாளை சந்தையில் வாடிக்கையாளர்கள் பர்கர் வேண்டும் என்று கேட்டால் ரஹ்மான் சிறப்பான பர்கர்களை விற்கத்துவங்குவார் - அவர் ஒரு நல்ல திறமையான வியாபாரி. பர்கரோ பீஸாவோ ஒரு ஏழு மணி நேரம் போனால் கழிந்து போகும்.
எ.அ.பாலா
நன்றி: ரோஸாவசந்த் & Kaargi Pages







